சுஜாதா நினைவு நாள்(27-Feb-2009) பற்றி எழுத யோசிக்கும்போது, “Toward the person who has died we adopt a special attitude: something like admiration for someone who has accomplished a very difficult task” என்ற freudன் கூற்று நினைவுக்கு வந்தது.இருந்தபோதும், சுஜாதா என்ற குருவிடமிருந்து தன்னார்வத்துடன் கற்றுக்கொண்டிருக்கும் அனேக ஏகலைவன்களில் நானும் ஒருவன் என்ற காரணமே இந்தப் பதிவை எழுதப் பணித்தது.
இந்த ஒரு வருடத்தில் நாம் இழந்தது சுஜாதாவின் எழுத்தை மட்டும் அல்ல. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பல தலைமுறைகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கும் சுஜாதாவின் சாதனை ரோமானிய வீரன் ஸ்பார்ட்டகஸ்ன் சாதனையை ஒத்தது. நல்ல புத்தகங்கள் மக்களிடம் போய்ச்சேர அவர் எடுத்த முயற்சியைத் தொடர்வதே,கற்கை நன்றே என்ற அவ்வையின் வாக்கையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் வாசகர்களின் ரசனையை தனது எழுத்து மூலம் உயர்த்திய இந்த மேதைக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தோன்றுகிறது
Keatsian Despair,Chaos Theory,Deep Simplicity போன்றவற்றின் எளிமையான விளக்கங்களும்,அவருடைய வசன வரிகளில் தெறிக்கும் குறும்புகளும் ஏற்படுத்தும் ஆச்சரியத்தையும் விஞ்சி,இவற்றின் சிருஷ்டிகர்த்தா இன்று இல்லை என்ற நினைவின் தசரத சோகம் மேலெழுந்து கண்களின் ஓரத்தில் நீர் துளிர்ப்பதை தடுக்க இயலவில்லை.
எனினும்,
“ ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே”
என்ற கீதையின் வரிகள் கொடுக்கும் நம்பிக்கையுடன் தொடர்வோம்.